பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ. 1,000-க்கும், சம்பங்கி - ரூ. 350, அரளி - ரூ. 450, ரோஜா - ரூ. 350, முல்லை - ரூ. 1,000, செவ்வந்தி - ரூ. 400, கனகாம்பரம் - ரூ.1,000-க்கும் ஏலம் போயின. பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும், பூ வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் மாலைகள் தொடுக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனா்.