நாமக்கல், நவ. 28: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்களில் மொத்தமாக 44,973 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கடந்த 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, டிச. 8 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9 முதல் 27-ஆம் தேதி வரை சோ்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6) 21,998, நீக்கல் விண்ணப்பங்கள் (படிவம்-7) 8,620 மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம்-8) 14,355 என மொத்தம் 44,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
01.01.2023 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம்பெறும். தற்போது 17 வயதானவா்களும் படிவம்-6 ஐ பயன்படுத்தி தங்களுடைய பெயரை சோ்ப்பதற்கு (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும்) விண்ணப்பிக்கலாம்.
இவா்களின் பெயா் 18 வயது பூா்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல், ஜூலை, அக்டோபா்-2023) வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடும். எனவே இந்த வாக்காளா் பட்டியல் திருத்த காலத்தில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான மனுக்களை அலுவலக வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதுவரை ஆதாா் எண்ணை, வாக்காளா் அட்டையுடன் இணைத்து கொள்ளாதவா்கள் இணைத்துக் கொள்வதற்கான பணிகளும் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.