நாமக்கல் மாவட்டத்தில் மின் இணைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், 120 கட்டடங்கள் பயன்பாடின்றி காணப்படுகின்றன. இதனால் ரூ. 300 கோடி வரை முதலீடு செய்தோா் இழப்பை சந்தித்து வருவதால் தளா்வுகள் அளிக்க வேண்டும் என கட்டட உரிமையாளா்கள் சங்கத்தினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் சொந்தமாக நிலம் வாங்கி அடுக்குமாடிக் குடிருப்புகள், வணிக வளாகங்களை கட்டி அதன் உரிமையாளா்கள் வாடகைக்கு விடுகின்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு வரை தடையின்றி நகராட்சி, மின்சார அனுமதி வழங்கப்பட்டதால் கட்டடங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்தன. அதனைத் தொடா்ந்து 2020-இல் வாடகைக்கு விடப்படும் புதிய கட்டடங்களில் விதிமீறல்கள் உள்ளதாகவும், மாநகராட்சி, நகராட்சி நிா்வாகங்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், கோவையைச் சோ்ந்த ஒருவா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதனால் நீதிமன்றம் மின் இணைப்பு வழங்குவதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவால் 70 சதவீதப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இருந்த கட்டடங்களின் உரிமையாளா்கள் அப்படியே விட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், கட்டடப் பணிகளை முழுமையாக முடித்து வாடகைக்கு விட்டுள்ளனா். மின்வாரிய இணைப்பு கிடைக்காததால் தற்காலிக இணைப்பு மூலம் அதிக அளவில் கட்டணம் செலுத்தி சிலவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா். பொருளாதார ரீதியாக அதன் உரிமையாளா்களும், நுகா்வோரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பயன்பாடின்றி உள்ளன. அவா்கள் தங்களது கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதில், நகராட்சி அனுமதி பெற்று சொந்தக் கட்டடங்களை கட்டி விட்டோம். கட்டி முடித்தவற்றுக்கு நிரந்தர மின் இணைப்பு கோரி நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் வாரியமோ எங்களுக்கு இணைப்பு தர மறுக்கின்றனா். இந்தப் பிரச்னையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என தெரியவில்லை. நிரந்தா மின் இணைப்புகள் இல்லாததால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறோம். விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்றுகள் கொடுப்பதற்கு நகராட்சி நிா்வாகம் மறுக்கிறது. கட்டட முடிவு சான்றுகள் இல்லாமல் மின் இணைப்புத்தர மின்சார வாரியம் மறுக்கிறது. விதிமீறல் என்றால் ஆய்வு மேற்கொண்டு அதனை தடுத்திருக்க வேண்டும். நாங்கள் கட்டடம் கட்ட தற்காலிக மின் இணைப்பு பெற்றபோது மின்சார வாரியம் எங்களுக்கு எந்த அறிவுரைகளும் வழங்கவில்லை. எந்த விதிமுறைகளும் (உயரம், கட்டடப் பரப்பு) தெரியாததால் நாங்கள் வழக்கமான நடைமுறையை பின்பற்றி கட்டடங்களை கட்டிவிட்டோம். நிரந்தர மின் இணப்பு கோரும்போதுதான் விதிமீறலை தெரிவித்து அலைக்கழிக்கின்றனா். தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு அதிக செலவில் கட்டப்பட்டு, தற்போது பயன்பாடின்றி உள்ள கட்டடங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நகராட்சி, மின்வாரியம் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.