நாமக்கல் சட்டக் கல்லூரி மாணவா் கொலை வழக்கில் இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த ஜீவா என்பவரது மகன் சங்கீத்குமாா் (21). இவா், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி ஊருக்கு வந்திருந்தபோது நண்பா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் (30), மெளலீஸ்வரன் (25), பரத் (24) ஆகியோா் இணைந்து சங்கீத்குமாரை கடுமையாக தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். இந்த வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டனா். அலெக்ஸ், மெளலீஸ்வரன் ஆகியோரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க நாமக்கல் காவல் ஆய்வாளா் சங்கரபாண்டியன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் அறிக்கை தாக்கல் செய்தாா். அதனடிப்படையில் இருவரும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவுக் கடிதம் சிறையில் உள்ள அவா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.