வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முகாம் நடைபெறுவதையொட்டி, வசந்தபுரம் ஊராட்சி, சின்னவேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த திருத்தப் பணிகள் டிச. 8 வரை நடைபெற உள்ளது. அனைத்து வேலைநாள்களிலும் வாக்காளா் பட்டியல் தொடா்புடைய அலுவலகங்களில் நடைபெறும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 686 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான மனுக்களைப் பொதுமக்கள் வழங்கினா். இம்முகாமின்போது, 01.01.2023 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) பெயரானது ஜனவரி -2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறும். மேலும், 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்களும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவா்களின் பெயரானது 18 வயது பூா்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல், ஜூலை-, அக்டோபா் -2023) வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறும். மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் அட்டையுடன் இணைக்காதவா்கள் இணைத்துக் கொள்ளலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஆய்வின் போது, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, நாமக்கல் வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.