பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், சோழசிராமணியில் சிறப்பு மருத்துவ முகாம் சோழசிராமணி அரசுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கபிலா்மலை வட்டார மருத்துவ அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சேகா், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ரவி, சோழசிராமணி ஊராட்சி மன்றத் தலைவா் கோகிலா ஆகியோா் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தனா்.
இம்முகாமில், பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு, கொழுப்புச் சத்து பரிசோதனை போன்ற ஆய்வக பரிசோதனைகளும், இ.சி.ஜி., கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, சித்த மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இதில், ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியும், சுகாதாரத் துறையினா் சாா்பில் டெங்கு பற்றிய கண்காட்சியும், குடும்ப நலத் துறை கண்காட்சியும் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.