நாமக்கல் நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் தங்களுடைய ஆலோசனைகளை வழங்கலாம் என நகராட்சி ஆணையா் கி.மு.சுதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் நகராட்சி தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வழங்கும் குப்பை இல்லாத நகரத்துக்கான மூன்று நட்சத்திர குறியீடை பெற தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் நகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகள் தரம் பிரித்து கையாளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள், ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் 15 நாள்களுக்குள் நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.
மலம் இல்லா நகரம்: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வாா்டுகளிலும், 100 சதவீதம் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இது தொடா்பான தங்களது ஆலோசனைகள், ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின் 15 நாள்களுக்குள் நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கலாம்.