நாமக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவ அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.
வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட ஆட்சியா், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான கா்ப்பிணிகளின் விவரங்களைப் பதிவு செய்தல், மாதாந்திர பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை அளித்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி, பிறப்பு சான்றிதழ் வழங்குதல், குடும்ப நலம், கரோனா தடுப்பூசி பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.
காசநோய், தொழுநோய், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் திட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் சிகிச்சை, பயனாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்பட்ட நபா்களின் சுகாதார முன்னேற்றம் குறித்தும் ஆட்சியா் விரிவாகக் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, சுகாதார பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மோகனூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு முதல் பரிசு, நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு இரண்டாவது பரிசு, பேளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு மூன்றாம் பரிசை வழங்கினாா். மருத்துவ அலுவலா்கள் மேலும் சிறப்புடன் பணியாற்ற ஆட்சியரால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன், துணை இயக்குநா்கள் (குடும்ப நலம்) வளா்மதி, (தொழுநோய்) ஜெயந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.