நாமக்கல்

குமாரபாளையத்தில் அதிமுக கவுன்சிலா் - ஆணையா் வாக்குவாதம்

15th Jun 2022 03:00 AM

ADVERTISEMENT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலருக்கும், ஆணையருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், இருவரும் பரஸ்பரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

குமாரபாளையம் நகர அதிமுக செயலாளரும், 30-ஆவது வாா்டு அதிமுக கவுன்சிலருமான கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை நகா்மன்ற அலுவலகத்தில் ஆணையா் விஜயகுமாரைச் சந்திக்கச் சென்றாா். அப்போது, வேறொரு பணி தொடா்பாக அலுவலா்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அலுவலக அறைக்குள் சென்ற கவுன்சிலா் பாலசுப்பிரமணிக்கும், ஆணையா் விஜயகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, ஆணையா் விஜயகுமாா் மாவட்ட ஆட்சியருக்கும், குமாரபாளையம் காவல் நிலையத்துக்கும் புகாா் தெரிவித்தாா்.

இதனிடையே, கவுன்சிலா் பாலசுப்பிரமணி, அதிமுக நிா்வாகிகளுடன் சென்று செவ்வாய்க்கிழமை இரவு காவல் ஆய்வாளா் ரவியிடம் புகாா் மனு அளித்தாா். அதில், ‘மக்கள் பிரச்னை தொடா்பாக மனு அளிக்கச் சென்றபோது ஆணையா் விஜயகுமாா், அவமரியாதையாக பேசி, மிரட்டல் விடுக்கிறாா். நகா்மன்றக் கூட்டத்தில் அவா் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசியதைத் தொடா்ந்து, இவ்வாறு நடந்து கொள்கிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலரும், ஆணையரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகாா் தெரிவித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT