நாமக்கல்லில் கோழிக் கழிவுகளை சாலையில் கொட்டிய நிறுவனத்துக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்-நல்லிபாளையம் சாலை, சேந்தமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக்காக பயன்படுத்திய கோழிக் கழிவுகள், பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை சிலா் இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனா்.
அவ்வாறு கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நல்லிபாளையம் சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கோழி, முட்டைக் கழிவுகளைக் கொட்ட வந்த லாரியை, நகராட்சி சுகாதார அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான ஊழியா்கள் மடக்கிப் பிடித்தனா். பின்னா் அந்த லாரி, நாமக்கல் நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.