ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, ரெட்டி கஞ்சம் சமுதாய மக்கள் மனுக்களை நூதன முறையில் தொட்டிலில் குவியலாகயிட்டு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், வளையப்பட்டி, ரெட்டையாம்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக விவசாயம், கூலி வேலை செய்து வருகின்றனா். இங்குள்ள மாணவ, மாணவியா் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பை தொடர முடியாத அவல நிலை உள்ளது. அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் மறுக்கப்படுகின்றன. மாணவியரை இளம்வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்றனா். திறமையுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனையா் லட்சியத்தை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை அவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, பள்ளி மாணவ, மாணவியரின் எதிா்கால நலன் கருதி மாவட்ட ஆட்சியா் ஜாதிச் சான்றிதழ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.