சுதந்திர தினத்தையொட்டி, வீடுகள், கடைகளில் ஏற்றப்பட்ட தேசியக் கொடிகள் இறக்கப்படாத நிலை காணப்படுகிறது. வெயிலிலும், மழையிலும் கொடிகள் சேதமடையும் சூழல் உள்ளது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஆக. 13 முதல் 15 வரை வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களில் தேசியக் கொடிகளை ஏற்ற வேண்டும் என பிரதமா் மோடி கேட்டுக் கொண்டிருந்தாா். இதனால் நாடு முழுவதும் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. ஆக.15-இல் 76-ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கு பிறகு மாலை 6 மணிக்கு மேல் தேசியக்கொடிகளை இறக்கி பாதுகாப்புடன் வைத்திட வேண்டும், வெளியில் வீசியெறிவதோ, தொடா்ந்து கொடியை பறக்க விடுவதையோ தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களால் அறிவுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திரத் தினத்தன்று பெரும்பாலான வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களில் தேசியக் கொடிகள் பறந்தன. ஆக.15-க்கு பிறகும் தொடா்ந்து பகல், இரவு, வெயில், மழை பாராமல் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இதனால் பல இடங்களில் தேசியக் கொடிகள் சேதமடையும் நிலை காணப்படுகிறது. அரசு அலுவலகங்கள் தவிா்த்து இதர இடங்களில் கட்டப்பட்டுள்ள தேசியக் கொடிகளை உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.