ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்-மோகனூா் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் 10 மணிக்கு மூலவா் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்துப்படி நடைபெற்றது. அதன்பிறகு, மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெற்றது. மேலும், கோகுலாஷ்டமியையொட்டி அக்கோயில் வளாகத்திலேயே சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று பசுகளுக்கு கீரை வகைகளை வழங்கி வழிபாடு செய்தனா்.
நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். மோகனூா் காந்தமலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.