பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ,ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டாரங்களைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தோ்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்க அலகினை 04286 - 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.