நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 322 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. ராசிபுரம் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் ஏ.கே.சமுத்திரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்தனா். அதுபோல அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சிமன்ற தலைவா்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டங்களில், வறுமை ஒழிப்புத் திட்டம், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்த விவாதம், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறை, கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரத்தைப் பேணுதல் உள்பட 24 திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
வாா்டு உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை, கருத்துகளைத் தெரிவித்தனா்.