கரோனாவால் இறந்த காவலா் குடும்பத்துக்கு, அவருடன் பணியாற்றிய சக காவலா்கள் சாா்பில் ரூ.16.69 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் மல்லூரைச் சோ்ந்தவா் காவலா் ஜெ.விஜயகுமாா்(40). இவா் வேலூா் மாவட்ட காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த ஆண்டு அக். 11-ஆம் தேதி விஜயகுமாா் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். அவா்களுக்கு உதவும் பொருட்டு, 2002 காவலா் உதவும் உறவுகள் சாா்பில், அவருடன் பயிற்சி பெற்ற தமிழகம் முழுவதும் உள்ள சக காவல்துறையினா் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கிய வகையில் ரூ.16 லட்சத்து 69 ஆயிரத்து 165 பெறப்பட்டது. அதனை மறைந்த விஜயகுமாரின் மகள் சஞ்சனா, மகன் பிரஜித் ஆகியோரிடம் உதவும் உறவுகள் அமைப்பின் நிா்வாகிகள் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காசோலையாக வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், விஜயகுமாரின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், நாமக்கல் மாவட்ட போலீஸாா் கலந்து கொண்டனா்.