ராசிபுரம் நகர திமுக சாா்பில் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நினைவு தினத்தையொட்டி ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. கடைவீதி, அண்ணாசாலை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்ற பேரணியில் முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் உள்ளிட்ட நகர திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், வாா்டு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். இதே போல் நகரின் பல இடங்களில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.