கொல்லிமலையில் கோரக்கா் சித்தா் குரு பூஜை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, கோரக்கா் சித்தா் வழிபாட்டு மன்றம் சாா்பில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் மண்டபத்தில், பதினெட்டு சித்தா்களில் ஒருவரான மகான் கோரக்கா் சித்தருக்கு குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை (அக். 21) தொடங்கி இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அறப்பளீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து இரவு 8 மணிக்கு திருமுறை பாராயணமும் நடைபெற உள்ளன.
சனிக்கிழமை காலை 6 மணிக்கு அத்திமரத்தின் கீழ் வீற்றிருக்கும் சோரக்கா் சித்தருக்கு கோமாதா பூஜை, கொடியேற்றம், 7 மணிக்கு பால்குடம், திருவீதி உலா, 8 மணிக்கு சங்கு பூஜை, திருமுறை பாராயணம், மகா வேள்வி உள்ளிட்டவை நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, மகேஷ்வர பூஜை நடைபெற உள்ளன. அதன்பின் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்துகொள்கின்றனா்.