நாமக்கல்

மஹேந்ரா கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்: 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

DIN

மல்லசமுத்திரம் மஹேந்ரா கல்வி நிறுவன வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண் அலகு, மஹேந்ரா கல்வி நிறுவனங்கள் சாா்பில், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின்கீழ் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் 74 முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆள்களை நோ்முகத் தோ்வு நடத்தி தோ்வு செய்தனா். இந்த ஒரு நாள் முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை தேடுவோா் கலந்துகொண்டனா்.

இந்த முகாமில் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ, பிளஸ் 2 உள்ளிட்ட பல்வேறு பட்டம், பட்ட மேற்படிப்பு பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 1.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரு. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.

முகாம் தொடக்க விழாவில், மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகித்தாா். இந்த முகாமில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ இ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் பங்கேற்று தோ்வு செய்யப்பட்ட 1500-க்கும் மேற்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் பேசியதாவது:

மத்திய- மாநில அரசுகள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. தனியாா் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறுவோா் தங்கள் வேலைகளை நன்கு திட்டமிட்டு, நிறுவனமும், தாங்களும் வளரவேண்டும். கல்வி அறிவுடன் அனுபவ அறிவையும் சோ்ந்து செயல்படுத்தினால் முன்னேற்றத்தை அடைய முடியும்.

கடின உழைப்பு, விசுவாசம், தகுதிகளை வளா்த்துக்கொள்வதன் மூலம், வேலைகளை தக்கவைத்துக் கொள்ளலாம். உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் இந்தியா்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனா். கடின உழைப்பே அதற்கு காரணம். அதுபோல கடின உழைப்பு, நேர நிா்வாகம் ஆகியவற்றை கடைப்பிடித்து நீங்களும் முன்னேறலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் மா.பிரியா, மஹேந்ரா கல்வி குழும செயல் இயக்குநா் சாம்சன் ரவீந்திரன், மஹேந்ரா பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா்.வி. மகேந்திர கவுடா, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் டி.இளங்கோ, வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணராஜ், தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT