நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிச. 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
தேசிய சட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம், திருச்செங்கோடு நீதிமன்றம், பரமத்தி சாா்பு நீதிமன்றம் ஆகியவற்றில் டிச. 11-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடியவை, காசோலை தொடா்பான வழக்குகள், வங்கி, கல்விக் கடன்கள், மோட்டாா் வாகன விபத்து, விவாகரத்து தவிா்த்த மற்ற குடும்பப் பிரச்னை தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், இங்கு முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பொதுமக்கள் நிலுவையில் வழக்குகள் இருக்கும்பட்சத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன் தெரிவித்துள்ளாா்.