நாமக்கல், பரமத்தி, கொல்லிமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என பரமத்தியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாவட்டத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். செயலாளா் சிவக்குமாா், பொருளாளா் மோகன்ராஜ் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.
இதில், தோட்டக்கலைத் துறையில் பணியாற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் 11 பேருக்கு தோ்வுநிலை ஊதியம் ஓராண்டுக்கு மேலாகியும் வழங்கப்படவில்லை. அவற்றை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாமக்கல் வட்டாரத்தில் ஆட்சியா் அலுவலக வளாகத்திலும், பரமத்தியில் நல்லூா் கிராமத்திலும், கொல்லிமலையில் செங்கரை எடப்புளிநாடு கிராமத்திலும் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.