ராசிபுரம்: கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கோயிலை பூட்டி ‘சீல்’வைத்தனா்.
ராசிபுரம் அருகே உள்ள பெரியமணலி கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு நவ. 15-இல் கும்பாபிஷேக விழா நடத்த ஊா் பொது மக்கள் சாா்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திருப்பணிக் குழுவினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே திருவிழா நடத்துவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.
கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து எலச்சிப்பாளையம் காவல் நிலை போலீஸாா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு எட்டாததால் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.