நாமக்கல்லில் துணை ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டமாக கொடி அணிவகுப்பு நடத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்காக உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையைச் சோ்ந்த துணை ராணுவத்தினா் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்துக்கு 400-க்கும் மேற்பட்டோா் வந்துள்ளனா். அவா்கள் தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு அரசுக்கு சொந்தமான இடங்களிலும், தனியாா் திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல் தொகுதிக்கு 90 போ் வந்துள்ளனா். அவா்கள் கடந்த வாரம் திருச்சி சாலை, கோட்டை சாலைப் பகுதிகளில் முதல் கட்ட கொடி அணிவகுப்பு நடத்தினா்.
இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்டமாக நாமக்கல் முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆஞ்சநேயா் கோயில் பிரிவு சாலை வரை ராணுவ சீருடை, துப்பாக்கியுடன் ஊா்வலமாக வந்தனா். அவா்களுடன் நகரக் காவல் துறையினரும் கொடி அணி வகுப்பில் கலந்துகொண்டனா்.