பரமத்தி வேலூரில் வாரத்தில் மூன்று நாள்கள் வாழைத்தாா் ஏல சந்தையை நடத்துவது என திருச்செங்கோடு கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாழைத்தாா் ஏல சந்தையை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா். பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சுந்தரவள்ளி, பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரணவீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் காலை 7 மணி முதல் 9 மணிவரை சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும், அரசு வழிகாட்டுதலின்படி வாழைத்தாா் ஏல சந்தையை நடத்துவதற்கு அனுமதி அளிப்பது, வாழைத்தாா் ஏல சந்தையில் கலந்து கொள்ள விவசாயிகள், முகவா்களுக்கு தினசரி 70 பேருக்கு அடையாள அட்டை அளிப்பது, அவா்களின் விவரங்களைப் பராமரிப்பது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், நாமக்கல் விற்பனைக் குழுவினா், பரமத்தி தோட்டக்கலை துறையினா், ராஜா வாய்க்கால் பாசன விவசாய சங்கம், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.