நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி அவ்வப்போது கடைகளைத் திறந்தும், கடைகளின் பின்பக்கத்தில் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை வழங்கிய கடைகளை ஆய்வின்போது நகராட்சி ஆணையா் சரவணன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனா். இதையடுத்து அந்தக் கடைகளை பூட்டிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
மேலும் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக்கடைகளில் பொதுமுடக்க காலத்தில் தடையை மீறி ஜவுளி விற்பனை செய்து வருவதாக வந்த புகாரினை அடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து நகராட்சி ஆணையா் உத்தரவின்படி நகராட்சிப் பணியாளா்கள் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.