பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவரை வேலூா் போலீசாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.1.69 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் பேட்டை கடைவீதியில் உள்ள கடை மற்றும் வீடுகளில் சிலா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திப்பதாக பரமத்திவேலூா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூா் போலீஸாா் பேட்டையில் உள்ள கடை, வீடுகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ1.69 லட்சம் மதிப்புள்ள 190 கிலோ குட்கா பொருட்களை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பேட்டை கடைவீதியைச் சோ்ந்த ராமசேகா் (62) வேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்த மதன்லால் (35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.