பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா், சக்தி நகா் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் உத்தரவின் பேரில், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அதில், குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, சுமாா் 300 கிலோவுக்கும் மேற்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.