நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் உள்ள செலம்பகவுண்டா் பூங்கா மற்றும் இதர பொழுதுபோக்கு இடங்கள், கொல்லிமலை ஆகாய கங்கை, மாசிலா அருவி போன்ற சுற்றுலாத்தலங்கள், காவிரி ஆற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள் அதிகம் கூடுவா். அப்போது கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை வரை அப்பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.