நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மூன்று வேளாண் மசோதாக்களைக் கண்டித்து திங்கள்கிழமை நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் மூன்று புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் அந்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார்.
இதில் மசோதாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் நவீத், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தான் மற்றும் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்டவற்றின் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.