பரமத்திவேலூரிலிருந்து மோகனூா் மற்றும் மோகனூா் வழியாக திருச்சிக்கு இரு தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனா்.
பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல்,திருச்செங்கோடு, கரூா், ஜேடா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரமத்திவேலூா் வழியாக சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா் மற்றும் மோகனூா்,காட்டுப்புத்தூா் வழியாக திருச்சிக்கு காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களில் இரண்டு தனியாா் பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இந்த இரு பேருந்துகளும் பரமத்திவேலூா் வந்து செல்வதால் பாலப்பட்டி, மணப்பள்ளி, மோகனூா், காட்டுப்புத்தூா், தொட்டியம், முசிறி வழியாக திருச்சி செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால் பல்வேறு வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், குலதெய்வக் கோயில்களுக்கு செல்வோா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பரமத்தி வேலூரில் இருந்து மோகனூா், காட்டுப்புத்தூருக்கும், மோகனூா் வழியாக திருச்சிக்கும் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.