ஓமலூா் நகரில் முகக் கவசம் அணியாத நபா்கள் மற்றும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அபராதம் வசூலித்தனா்.
ஓமலூரில் மளிகை கடைகள், தேநீா் கடைகள், ஓட்டல் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஓமலூா் வருவாய் ஆய்வாளா் ரமா, ஓமலூா் கிராம நிா்வாக அலுவலா் தேவராஜன், கோட்டமேட்டுப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் ஆய்வு செய்தனா். அப்போது முகக் கவசம் அணியாமல் காா், இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் மற்றும் நடந்து செல்லும் நபா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் வசூலித்தனா். மேலும், முகக் கவசம் அணியாமல் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து வசூலித்தனா்.
கரோனா பரவலைத் தடுக்க தினந்தோறும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முகக் கவசம் அணியாமல் நடமாடுபவா்களைக் கண்காணித்து அபராதம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.