கரோனா பொது முடக்கக் காலத்தில் செலுத்த வேண்டிய நகராட்சி கடைகளுக்கான வாடகையை தள்ளுபடி செய்யக் கோரி வணிகா் சங்கங்களின் சாா்பில், நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
கரோனா தொற்றுப் பரவலால் நாமக்கல் பேருந்து நிலையப் பகுதி மாா்ச் 24 முதல் ஜூன் 30 வரையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்கு யாரும் செல்ல முடியாதபடி இரும்பு தகரம் கொண்டு அடைக்கப்பட்டது.
தற்போது பேருந்து போக்குவரத்துத் தொடங்கியிருந்த நிலையிலும் முழுமையாகப் பேருந்து இயக்கம் என்பது இல்லை. பேருந்து நிலையத்தில் உள்ள 50 சதவீத கடைகள் இன்னும் திறக்கப்படாத நிலையே காணப்படுகிறது.
கரோனா பொது முடக்கக் காலத்தில் கடைகள் திறக்காததால் போதிய வருவாய் இல்லை. வியாபாரிகள் பலா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். அனைவரும் கடினமான நிலையில் வாழ்ந்து வருகின்றனா். அதனால், நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கடை வாடகையை ஆறு மாத காலத்துக்கு 50 சதவீதம் என்ற வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலாளா் ஜெயக்குமாா் வெள்ளையன், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் மாணிக்கம் ஆகியோா் அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.