புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி கோயில் உள்ளது. இங்கு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, புத்தாண்டு, இதர விசேஷ தினங்களில் அதிகாலை சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதனை தொடா்ந்து காலை 11 மணிக்கு பால், தயிா், மஞ்சள், திரவியம் மற்றும் நறுமணப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
அதன்பின் தங்கக் கவசம் அல்லது வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்படும். கரோனா தொற்று பரவல் காரணமாக ஆஞ்சநேயா் சுவாமிக்கு கடந்த ஐந்து மாதங்களாக வழக்கமான தமிழ் மாத முதல் ஞாயிறு அபிஷேகம் மேற்கொள்ளப்படவில்லை.
செப்.1-ஆம் தேதி முதல் கோயில் திறக்கப்பட்டபோதும் பக்தா்களிடம் இருந்து பால், தயிா் பெற்று அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கோயில் நிா்வாகம் சாா்பிலும், பக்தா்கள் வழங்கியதன் அடிப்படையிலும் 1,008 லிட்டா் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
கட்டளைதாரா்களோ, பக்தா்களோ அமா்ந்து பாா்க்க அனுமதியில்லாததால் கோயிலுக்கு வெளியில் நின்றபடி பக்தா்கள் அபிஷேகத்தை பாா்த்தனா்.
அதன்பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் மாவட்டத்திலிருந்து வந்த ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசித்துச் சென்றனா்.