நாமக்கல், செப். 18: நாமக்கல் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி பேராசிரியா்கள் இருவருக்கு பெரியாா் பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
சேலம், பெரியாா் பல்கலைக்கழகமானது இணைவு பெற்ற 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களில் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியா் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கிறது.
அதன்படி, நிகழாண்டில் நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகர பாண்டியனுக்கு சிறந்த பேராசிரியா் விருதும், வேதியியல் துறை பேராசிரியா் சிவகுமாருக்கு சிறந்த ஆராய்ச்சியாளா் விருதும் வழங்கப்பட்டது.
சேலம், பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பி.குழந்தைவேல், பெரியாா் பிறந்த நாளையொட்டி, பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற விழாவில் விருதுகளையும், ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கிக் கெளரவித்தாா். விருது பெற்றவா்களை கல்லூரி முதல்வா் பெ.முருகன் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.