நாமக்கல்லில் திருக்கார்த்திகை விழாவையொட்டி, வீடுகளில் மக்கள் அகல் விளக்குகளை ஏற்றியும், கோயில்களில் பக்தர்கள் சொக்கப்பனை கொளுத்தியும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனர்.
கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை விழாவையொட்டி, திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும். அதனை தொடர்ந்து, அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருக் கார்த்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும் சுவாமிக்கு கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு செய்தனர்.
நாமக்கல் ஏகாம்பரேசுவரர் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதர் கோயில், வள்ளிபுரம் தான் தோன்றீசுவரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 6.30 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது.
நாமக்கல் அரங்கநாதர் கோவில் படிக்கட்டுகளில் பெண்கள் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். கோயில்களில் நடைபெற்ற திருக்கார்த்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.