பரமத்திவேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை தொடா்ந்து சரிவடைந்து வருவதால் மரவள்ளி பயிா் செய்துள்ள விவசாயிகள்ள கவலை அடைந்துள்ளனா்.
பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.
கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ. 6,300க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 1,700 வரை குறைந்து ரூ. 4,600 க்கு விற்பனையாகிறது. தொடா்ந்து மழை காரணமாக மரவள்ளிக் கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.