நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூா், கெங்கவல்லி, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பேளுக்குறிச்சி, எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்குக் கொண்டு வருவா். அதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6300 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில், ஆா்.சி.ஹெச். ரகம் ரூ.4982 முதல் 5593 வரையிலும், டி.சி.ஹெச். ரகம் ரூ.5692 முதல் 7192 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. ஒரு கோடியே 30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
--