நாமக்கல்

அல்லாள இளைய நாயகருக்கு திருவுருவச் சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

17th Jun 2020 08:49 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலை வெட்டிய அல்லாள இளையநாயகருக்கு சுமாா் ரூ.22 லட்சத்தில் திருவுருவச் சிலை மற்றும் குவி மாட மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் தொடக்கி வைத்தாா்.

பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் முதன்முதலாக கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளை ஆண்ட அல்லாள இளைய நாயகா் என்ற குறுநில மன்னா் 1623-ஆம் ஆண்டு ஜேடா்பாளையத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு ராஜ வாய்க்காலை வெட்டினாா்.

இந்த ராஜ வாய்க்கால் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் இன்று வரை பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ராஜ வாய்க்காலை அமைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பாசன வசதி பெற்றுத்தந்த அல்லாள இளைய நாயகருக்கு, திருவுருவச் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சுமாா் ரூ.22 லட்சத்தில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை அமைக்க கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஆணை பிறப்பித்தாா். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை செவ்வாய்க்கிழமை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி முலம் தொடக்கி வைத்தாா். அதனையடுத்து ஜேடா்பாளையம் படுகையணையில் மணிமண்டபம் அமையவுள்ள இடத்தில் பொதுப்பணித் துறையினா் மற்றும் வேட்டுவகவுண்டா் சமூகத்தினா், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா். பின்னா் அல்லாள இளையநாயகருக்கு சிலை மற்றும் குவி மாட மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சா் தங்கமணிக்கும் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT