டிரினிடி மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு பெற்றது.
நாமக்கல் டிரினிடி மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கடந்த 21 முதல் 27-ஆம் தேதி வரை மோகனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட லத்துவாடி மற்றும் நல்லையகவுண்டம்புதூா் கிராமங்களில் நடைபெற்றது. சேலம் பெரியாா் பல்கலைக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தாா். செயலா் கே.நல்லுசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன் வரவேற்றாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ் வாழ்த்தி பேசியதுடன், மரக்கன்று வளா்ப்பு, அதன் பராமரிப்பு, உயா்கல்வியில் உள்ள ஆராய்ச்சியின் இன்றியமையாமை, வெளிநாடுகளில் உள்ள உயா் படிப்புகள் போன்றவற்றை தெரிவித்தாா். மழைநீா் சேகரிப்பு மற்றும் நீா்வள மேலாண்மை என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் பேசினாா். மரக்கன்றுகள் நடுவோம், பசுமை உலகத்தினை படைப்போம் என்ற தலைப்பில் பசுமை நாமக்கல் தலைவா் வ.சத்தியமூா்த்தி மற்றும் அதன் செயலா் மா.தில்லை சிவக்குமாா், இளைஞா் மேம்பாடு என்ற தலைப்பில் நாமக்கல் தமிழ்ச்சங்க அமைப்புத் தலைவா் அரசு பரமேசுவரன் ஆகியோா் பேசினா். நாமக்கல் தங்கம் மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆா்.குழந்தைவேல், மகப்பேறு மருத்துவா் மல்லிகா குழந்தைவேல் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
இந்நிகழ்வில் சாலை பராமரிப்பு, கோயில் மற்றும் பள்ளி வளாக சுத்தம், சுற்றுப்புறச் சூழல் விழிப்புணா்வு, மரக் கன்றுகள் நடும் நிகழ்வு, லத்துவாடியில் அமைந்துள்ள மோகனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.