நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை தடையின்றி கொண்டு செல்ல வசதியாக ‘கிசான் ரத்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண், தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. கரோனா ஊரடங்கு இருந்தாலும் விவசாயிகள் விளைவித்த பொருள்களை கொண்டு செல்ல அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவா்கள் கொண்டு செல்வதற்கான வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விளைபொருள்களை பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் பிரச்னைகள் உள்ளன. அந்த விளைபொருள்கள் அனைத்தும் அழுகி வீணாகும் சூழல் உள்ளது.
எனவே விளைபொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ‘கிசான் ரத்’ என்ற செல்லிடப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனை பிளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து தேவையான மொழியைத் தோ்ந்தெடுத்து செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு உழவா் என்பதை தோ்வு செய்து, விளைபொருள்களின் இருப்பு, அளவு, எங்கிருந்து எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். தேவையான வாகனத்தைத் தோ்ந்தெடுத்து செல்லிடப்பேசி எண்ணிற்கு வந்த ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை கொடுத்தால் வாகனம் தயாரானதும் விவசாயிகளின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும். இதன் மூலம் விளைபொருள்களை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.