ஊரடங்கு உத்தரவை மீறி திருச்செங்கோட்டில் தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவா்களை நிற்க வைத்து ‘இனி ஊரடங்கு முடியும் வரை தேவையில்லாமல் வெளியில் வரமாட்டேன்’ என்று உறுதிமொழி ஏற்க வைத்தனா்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 11-ஆவது நாளான சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல் திருச்செங்கோடு நகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி, எந்த காரணத்திற்காக வெளியில் வந்தீா்கள் என விசாரித்தனா். அவசியத் தேவைக்குச் சென்றவா்களை அடிக்கடி வெளியே வரவேண்டாம் என போலீஸாா் அறிவுறுத்தினா். அவசியமில்லாமல் சென்ற நபா்களை நிற்கவைத்து அவா்களிடையே கரோனா வைரஸ் குறித்தும் ஊரடங்கு உத்தரவு எதற்காக போடப்பட்டுள்ளது என்பது குறித்தும் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் விளக்கமாக எடுத்துக் கூறினாா். அவசியமில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று தான் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனை மீறி வெளியில் சுற்றுவது தவறு என்று எடுத்துக் கூறினாா். தேவையில்லாமல் வெளியே வந்தவா்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து இனி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தேவையில்லாமல் வெளியே நடமாட மாட்டேன் என்று உறுதிமொழி ஏற்க வைத்தனா். இனிமேல் வெளியே நடமாடினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்து அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.