புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் இளையபெருமாள் மலைக் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை வணங்குவர். புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் இளையபெருமாள் மலையில் இளையபெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
பெருமாளை குல தெய்வமாக வழிபடுபவர்கள் பொங்கல் வைத்து படைத்து வழிபட்டு, முதல் வார விரதம் முடித்தனர்.
பரமத்தி வேலூர்... பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பிரசன்ன வெங்கட்ரமண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. மாலை 7 மணிக்கு மேல் திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பரமத்தி கோதண்டராமசாமி பெருமாள் கோயில், வேலூர் லட்சுமிநாராயண பெருமாள் கோயில், நன்செய் இடையாறு வெங்கட்ரமண பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.