அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு காய்ச்சல் தடுப்பு மருந்துக்குப் பதிலாக வேறு மருந்தை அளித்துவிட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
பொத்தனூரைச் சேர்ந்தவர் யுவராஜ் (28). இவரது மனைவி அனிதா (25). இவர்களின் பிறந்து 55 நாள்களே ஆன பெண் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக பாண்டமங்கலத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். அங்கிருந்த கிராம சுகாதார செவிலியர் ஒருவர், குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். இதையடுத்து குழந்தைக்கான காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை தாய் அனிதாவிடம் கொடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு குழந்தைக்கு லேசாக காய்ச்சல் வந்தபோது, காய்ச்சல் தடுப்பு மருந்தை எடுத்தபோது, அதில் வேறு மருந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் மருந்தை காண்பித்தபோது, அது ஒரு வயதுக்கு மேலான குழந்தைக்கு கொடுக்கப்படும் கீரிப்பூச்சி மருந்து என்பது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் அனிதா, கிராம சுகாதார செவிலியரை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் காய்ச்சல் தடுப்பு மருந்து பெட்டியைத் தான் கொடுத்ததாகவும், மருந்து மாறியிருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினாராம்.
இதுகுறித்து கபிலர்மலை வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது, பாண்டமங்கலம் துணை சுகாதார நிலையத்துக்கு வழங்கிய மருந்து பெட்டியில் ஒரு பெட்டியில் மட்டும் மருந்து மாறியிருந்தது தெரியவில்லை. ஆனால் கிராம சுகாதார செவிலியர் மருந்துகளை கொடுக்கும்போது மருந்துப் பெட்டியைத் திறந்து பார்த்து குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என விவரமாகக் கூறி கொடுத்திருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.