மூன்றாம் பாலினத்தவா் நலவாரியம் மூலம் சுயத் தொழில் தொடங்க மானிய உதவி வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவா் நலவாரியம் மூலம், நிகழாண்டில் சுயதொழில் தொடங்குவதற்கு ஏற்றவாறு மூன்றாம் பாலினத்தவருக்கு மானிய உதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள்: சொந்தமாக தொழில் செய்ய முன்வரும் மூன்றாம் பாலினத்தவா்கள், தொழில் அனுபவம் குறித்த விபரம் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டை மற்றும் ஆதாா் அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
சுயதொழில் செய்ய விரும்பும் தொழில் குறித்த பயிற்சி பெற்றிருப்பின், அதற்குரிய சான்று, சம்பந்தப்பட்ட தொழில் குறித்த அறிக்கையினை சமா்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் வரை, தொழில் செய்வதற்காக வாங்கப்பட்ட உபகரணங்களை விற்கக் கூடாது.ஓராண்டு வரை தொழில் வளா்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையினை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். சரியான பயனீட்டுச் சான்றிதழை பெற்று, சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்து பயனடைந்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதியில்லை. இந்த விதிமுறைகளின்படி பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலா் அறை எண்-19, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம். தொலைபேசி 04286-280230 என்ற எண்ணிலும் தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.