பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறை பகுதியில் செங்கோடன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் நிரப்புவதற்காக பணம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதில் உரிய ஆவணங்களின்றி ரூ.65 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.65 லட்சம் ரொக்கம் மற்றும் பணம் எடுத்து வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பரமத்தி வேலூர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவிகாராணியிடம் ஒப்படைத்தனர்.