நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.90 - ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்வு, கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை போன்றவற்றால் நாமக்கல், சென்னை மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. வியாழக்கிழமை ஒரே நாளில் 25 காசுகளை, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு உயர்த்தியது.
மற்ற மண்டலங்களில் தினசரி 10, 20 காசுகள் வீதம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.3.90 - ஆக நிர்ணயிக்கப்பட்டது. மூன்று நாள்களில் 45 காசுகள் விலை உயர்த்தியபோதும், பண்ணையாளர்கள் 50 காசுகளுக்கும் குறைவாகவே விற்பனை செய்கின்றனர்.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத் - 340, விஜயவாடா - 336, பார்வாலே - 310, மைசூரு - 370, ஹோஸ்பெட் - 340, சென்னை - 410, மும்பை - 385, பெங்களூரு - 375, கொல்கத்தா - 395, தில்லி - 315.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ.74, கறிக் கோழி விலை ரூ.100-ஆக நிர்ணயிக்கப்பட்டது.