நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில், ஜூலை 15-ஆம் தேதி பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் 80-ஆவது பிறந்த நாள் விழா முத்து விழாவாக கொண்டாடப்படுகிறது. 1980-இல் இருந்து 1987 வரையில் நடைபெற்ற இட ஒதுக்கீடுப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்களுக்கு, சென்னையில் நடைபெறும் விழாவில் அன்புமணி ராமதாஸ் பரிசு வழங்குகிறார்.
மேலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பிறந்த நாளன்று சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்படுகிறது.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில், பா.ம.க.வினர் மரக்கன்றுகள் வழங்கியும், நட்டும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். நாமக்கல்லில் சிறப்பு ரத்த தான முகாமும் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மனோகரன், மாவட்டத் தலைவர் பெருமாள், இளைஞர் சங்கத் தலைவர் துரை மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.