திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் திம்மராவுத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் போக்குவரத்து காவல்துறையினரால் வைக்கப்பட்ட சாலை தடுப்புகள் அடிக்கடி காற்றின் வேகத்தினால் கீழே விழுந்து வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன. இந்த சாலை தடுப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைத்து கட்டப்பட்டு இருப்பதால், வாகன் ஓட்டிகள் ஒருசிலரால் தூக்கி நிறுத்த முடிவதில்லை. அடிக்கடி கீழே விழுந்து விடுவதால் அக்கம்பக்கத்தினரும் தடுப்புகளை தூக்கி வைக்க ஆர்வம் காட்டுவதில்லை.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்புகள் கீழே விழுந்து கிடப்பது தெரியாமல் சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை இயக்கி, சாலையைக் கடக்க தடுப்புகளை காற்றின் வேகத்தில் கீழே விழாதவாறு நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்து, விபத்தினைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.