திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாலையோர புதரிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.
எலச்சிபாளைத்தில் இருந்து இராமபுரம் செல்லும் சாலையில் ஈச்சிகாடு என்ற இடத்தில் சாலையோர செடிகள் நிறைந்த புதரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையின் அலறல் சத்தம் சாலை வழியாக சென்றவர்களுக்குக் கேட்டுள்ளது. அழுகைச் சத்தம் வந்த இடத்தில் சென்று பார்த்தவர்கள் பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன பெண் பச்சிளம் குழந்தை வெயிலில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பச்சிளம் குழந்தையை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பச்சிளங் குழந்தையை வீசி சென்றது யார்? என்று எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.