ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வரகூராம்பட்டியைச் சேர்ந்த செந்தில்முத்துக்குமார் (48), கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
பள்ளிக்கு அடிக்கடி மதுபோதையில் வருவதுடன், மற்ற ஆசிரியர்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்து தலைமை ஆசிரியர் மாதேஸ்வரனிடம் தகராறு செய்தார். அவர் ராசிபுரம் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் செந்தில்முத்துக்குமார் மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, ஓவிய ஆசிரியரின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாலும், ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாலும் செந்தில்முத்துக்குமாரை பணியிடை நீக்கம் செய்து அவர் செவ்வாய்க்கிழமை உத்தரவு
பிறப்பித்தார்.